பத்துதலைப் பண்டிதனும் பாடியறியாத சிவம்
அத்துவித சங்கரனும் ஓதியுணராத சிவம்
முத்துவிளை கடற்குமரி கூடியிணையாத சிவம்
செத்துவிடு முன்பெனக்கு தீட்சை தருமோ சிவம்
பயந்து நின்னிரு பாதம்
பற்றிய பாலனும்
துணிந்து நின்மேல் பாசம்
சுற்றிய காலனும்
கனிந்து புண்மேல்தன்கண்
அப்பிய வேடனும்
நினைந்து கண்ட திருக்கோலம்
யான்காண்கிலனே
சந்திரரும் சூரியரும்
சங்கரமுனி மற்றவரும்
இந்திரரும் தேவர்களும்
இன்னபிற கின்னரரும்
எந்தையென ஏத்தியுனைப்
பாடிடவும் கண்டோம்
சிந்தையி லலாது நினைக்
கண்டவரும் உண்டோ
கண்டவருண்டு காணாது
பொய்யுரைத்த பூவினருண்டு
விண்டவருண்டு வீணாகக்
கதையளக்கும் பாவலருண்டு
உண்டவொரு குண்டோதரன்
செய்தசிறு சித்து
தொண்டரவர் கண்டுனது
திறமதில் வியந்தனரே